Tuesday, 28 January 2014

செங்கோட்டை

கதை சொல்லும் சிற்பம் Published: Tuesday, October 21, 2008, 12:06 [IST] திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கோடியில் கேரள எல்லையில் அமைந்த, இயற்கை அழகின் எழில் சார்ந்த நகரம் செங்கோட்டை ஆகும். கேரளத்திலிருந்து 52 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியை நல்லூர் ராஜா என்பவர் ஆண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இவ்வூரின் மேற்கு பகுதியிலுள்ள நல்லூர்கால் பகுதியில் கோட்டை அமைத்து மகாதேவர் கோயில், அதையொட்டிய அரண்மனை தீர்த்தகுளம், சுற்றியுள்ள கோட்டை போன்றவற்றை காலம் சிதைத்த அடையாளங்களாக இன்றும் காணலாம். அக்கோட்டைதான் செங்கோட்டை என அழைக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் செங்கோட்டை பல மகான்கள் அவதரித்த பூமியாகும். இங்கு நகரை சுற்றி ஏராளமான மகான்களின் ஜீவசமாதிகள் நிறைந்திருப்பதை காணலாம். இங்கு சிவனடியார்கள் அதிகமாக இருந்ததால் சிவன் கோட்டை என்ற பெயரும் இருந்தது. காலப்போக்கில் சிவன்கோட்டை மருவி செங்கோட்டை என்ற பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது. பல ஆண்டு காலமாக கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த நகரம் அன்று திருவாங்கூர் மன்னர்களின் தனிக்கவனத்தை ஈர்த்தது. இந்நகரை சுற்றி 28 குளங்கள் உள்ளன. முன்பு கேரளாவோடு இருந்தபோது யாராவது திருவாங்கூர் மகாராஜாவை சந்திக்க சென்றால் தச்சன்குளம் தண்ணீர் புன்னை மரத்தை தொட்டு விட்டதா என்றுதான் முதலில் கேட்பர். தச்சன்குளம் நிரம்பினால் முப்போகம் விளைவது உறுதி என்பது மகாராஜாவுக்கு தெரியுமாம். மேற்கு தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் உள்ள மிக சிறிய நகரம் செங்கோட்டை. 1956ம் ஆண்டு வரை கேரள எல்லைக்குட்பட்டிருந்தது. திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிந்து 1-11-1956ல் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இவ்வூர் தாலுகா அந்தஸ்து பெற்ற ஊராகும். இவ்வூரின் நுழைவு பகுதியில் ஒரு வளைவு அமைக்கபபட்டுள்ளது. அந்த வளைவின் இருபுறங்களிலும் இருகற்சிலைகள் 5 அடி உயரத்தில் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்னும் சங்குவடிவம் மேல்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. துவாரபாலகர் சிலை: வடபுறம் துவர பாலகர் சிலை வலது கரத்தின் ஒரு விரலை காட்டியபடி இடதுகரத்தின் மடக்கி மூடிவைத்தபடியும் உள்ளது. இச்சிலை குறித்து செங்கோட்டையில் சிற்பகலை கூடம் நடத்தி வரும் சிற்பி மணி ஆசாரி கூறுகையில், துவாரபாலகர் சிலைகள் பெரிய ஆலயங்களில் மூலஸ்தானத்திற்கு செல்லும் வாயிலில் வைக்கப்பட்டிருக்கும். அந்த சிலை போல் செங்கோட்டை நகர நுழைவு பகுதியில் வைக்கப்பட்டதின் நோக்கம் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆன்மீக பூமியாக விளங்கியது. அதன் நுழைவு பகுதியாக செங்கோட்டை இருந்ததால் ஊரின் நுழைவு பகுதியில் துவார பாலகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள இரு சிலைகளுக்கு இரண்டு கதைகள் உண்டு. ஊருக்குள் நுழையும்போது வலப்பக்கம் அமைந்துள்ள சிலை ஒருவிரலை காட்டியபடியும், மற்றொரு கரம் மடித்து வைத்தும் இருக்கிறது. இவ்வூருக்குள் நுழையும் நீங்கள் ஒரே நிலைப்பாட்டோடும், வேறு சிந்தனையின்றி மனதை அலைபாயவிடாமல் எண்ணங்களை அடக்கி அமைதியாக உள்ளே வாருங்கள், உங்களது பிரச்சனையை நான் தீர்க்கிறேன் என்றும், இடதுபுறம் அமைக்கப்பட்டுள்ள சிலை இறைவனை நம்பி இவ்வூர் வந்தவர்கள் மனபாரம் அகற்றி வெளியேறுங்கள் என்ற தத்துவத்தை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்று எனக்கு தெரிய எந்த ஊரிலும் ஊரின் நுழைவு பகுதியில் இதுபோன்ற சிலைகள் அமைக்கப்படவில்லை. மாற்றாக வேறு சாமி சிலைகள் தான் காவல் தெய்வங்களாக வடிவமைத்து வைத்துள்ளனர் என்றார். செங்கோட்டை என்றழைக்கப்படும் அன்றைய சிவன்கோட்டையில் நுழைவிலேயே பழமைவாய்ந்த ஏராளமான ஆலயங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/art-culture/essays/2008/1021-senkottai-marvel-of-trivancore.html

Monday, 27 January 2014

நிகண்டு - முனைவர். தொ.பரமசிவன்

நிகண்டு - முனைவர். தொ.பரமசிவன்

''எதற்கெடுத்தாலும் தொல்காப்பியமா? என்று என்ன தான் ''நவீனர்கள்'' முகம் சுழித்தாலும் தொல்காப்பியத்திலிருந்து தான் தொடங்க வேண்டியிருக்கிறது. நிகண்டு என்ற சொல்லும் அதற்குரிய பொருளும் இன்றைய தமிழ் ஆய்வாளர்கள் பெரும்பாலோருக்குத் தெரியாது. தமிழர்களின் மரபுவழி அறிவுத்தொகுதி எங்கே கிடக்கிறது - என்கிற ஞானமும் கவலையும் இவர்களுக்குத் தேவையில்லை. ஆனால் சமூக அக்கறையுள்ள ஆய்வாளர்களுக்கு இது ஒரு அடிப்படைத் தேவையாகும்.

நிகண்டு என்ற சொல் தமிழ்ச்சொல்லாக தோன்றவில்லை. அது தமிழ்ச் சொல் தான் என்று நிறுவுவதற்கு சுந்தர சண்முகனார் போன்றோர் பெரு முயற்சி செய்துள்ளனர். நம்முடைய பார்வையில் அந்த முயற்சி தேவை இல்லாதது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ''உரியியல்'' என்ற ஒரு பகுதியுள்ளது. இந்த இயலில் 133 சொற்களுக்குத் தொல்காப்பியர் சுருக்கமாகப் பொருள் கூறுகிறார். இதுவே தமிழ் அகராதியின் மூலம் என்று அண்மையில் கிரகோரி ஜேம்ஸ் (Gregory James) என்ற அமெரிக்கர் ''தமிழ் அகராதிகளின் வரலாறு'' (History of Tamil Dictionaries) என்ற தம் நூலில் எழுதுகின்றார்.

உரிச்சொல் கிளவி அல்லது உரிச்சொல் பனுவல் என்பது பிங்கல, கயாதர நிகண்டுகளிலும் காணப்படும் பழைய பெயராகும். நன்னூல் உரையில் ''உரிச்சொல் பனுவல்'' என்ற தொடரே காணப்படுகிறது. ''காங்கேயன் உரிச்சொல்'' என்பதே 16 ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒரு நூலின் பெயராகும். எனவே இரண்டு நூல்களின் பழைய பெயர் உரிச்சொல் (அ) உரிச்சொல் பனுவல் என்று தெரிகிறது.

தொலைக்காட்சியிலே வியக்கத்தகுந்த காட்சி ஒன்றைப் பார்த்த குழந்தை, கண்களை அகல விரித்து ''ஐ'' என ஒலி எழுப்புகிறது. இந்த ஒலியின் பொருளை எழுத்திலக்கியங்களில் தேட முடியாது. ''ஐ... வியப்பு ஆகும்'' என்று தொல்காப்பியர்தான் இதன் பொருளைத் தனது உரியியலில் விளக்குகின்றனார். வெள்ளரிக்காயின் மிகச் சிறிய பிஞ்சினை ''தவப்பிஞ்சு'' என்று நம்வீட்டுப் பெண்கள் கூறுவார்கள். ''தவ'' என்பது உரிச்சொல் ஆகும். அண்மைக் காலமாக பேச்சுத் தமிழில் புழங்கி வரும். ''சூப்பர், தூள்'' என்ற பண்பு அடைச்சொற்கள் எல்லாம் மரபிலக்கணப்படி உரிச்சொற்களாகவே கருதப்பட வேண்டும். தமிழ் இலக்கணமரபு அந்த அளவு நெகிழ்வுடையது. இப்போது ஒன்று புரிகிறது அதாவது மக்கள் மொழியின் உயிர்ப்பினையும் ஆற்றலையும் அறிய விரும்புபவர்கள் எல்லாம் தமது தேடலைத் தொல்காப்பியத்தின் உரியியலிலிருந்து தான் தொடங்க வேண்டும் 70, 80 ஆண்டுகளுக்கு முன்னர் வித்துவான் படிப்பில் நிகண்டுகள் சேர்க்கப்பட்டிருந்தன. பின்னர், அது கைவிடப்பட்ட போது அகராதியியல் அறிவே தமிழர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று. பிற்காலத்தில் வையாபுரிப்பிள்ளை, மு. அருணாசலம், சுந்தர சண்முகனார், வ. ஜெயதேவன் ஆகியோர் நிகண்டுகளைப் பற்றி கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளனர். தமிழில் இதுவரை 35 நிகண்டு நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இவற்றோடு 20 ஆம் நூற்றாண்டிலும் ''நவமணிக்காரிகை'' என்ற பெயரில் சோழவந்தானூர் அரசஞ்சண்முகனால் ஒரு நிகண்டு நூல் செய்துள்ளார் தமிழ் நிகண்டு நூல்கள் பொதுவாக 12 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 ஆவது தொகுதி தொகைப் பெயர்ப்பிரிவாகும். அதாவது தொகைச் சொற்களைப் பட்டியிலிடுகின்றது. எடுத்துக்காட்டாக காலம் மூன்று, பொறிகள் ஐந்து, அரசு உறுப்புகள் ஆறு, சிற்பத் தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருட்கள் பத்து, அலங்காரம் இருபத்தெட்டு என்ற வகையில் இது அமைகின்றது பதினொன்றாம் தொகுதி '' ஒரு சொல் பல் பொருள் பெயர் தொகுதியாகும். ஒரு சொல்லுக்குரிய எல்லாப் பொருளையும் கூறும் இதுவே அகராதிகளின் மூலவடிவமாகும். ஏனைய பதினோரு தொகுதி களம் கருத்துக்குச் சொல் தருவனவாகும். அதாவது ஆங்கிலத்தில் Thesaurus தெசாரஸ் எனப்படும் நூல் வகையைச் சேர்ந்தவை. இவை முறையே தெய்வப் பெயர் தொகுதி, மக்கள் பெயர்த் தொகுதி விலங்கினைப் பெயர்த் தொகுதி, பெயர்த் தொகுதி, பண்புப்பெயர்த் தொகுதி, செயல் பற்றிய பெயர்த் தொகுதி, ஒலி பற்றிய பெயர்த்தொகுதி என்றவாறு அமைகின்றன.

ஆங்கில மொழிகளில் Thesaurus என்னும் கருத்து விளக்கச் சொல் தொகுதி முதன் முதலாக 1852ல் Rogets என்பவரால் செய்யப்பட்டது. தமிழில் தொன்மையான நிகண்டு நூல்களான திவாகரமும் பிங்கல நிகண்டும் முறையே 9 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில் செய்யப்பட்டன. எனவே கருத்துக்குச் சொல் தேடும் முயற்சி தமிழர்களின் பழைய வழக்கம் என்று தெரிகிறது.

அறியப்பட்ட எழுதிதிலக்கியங்களை விட நிகண்டு நூல்கள் காட்டும் தமிழ் அறிவுலகம் மிகமிகப் பெரியதாகும் 10 வகையான பெயர்த்தொகுதிகளில் அவை மேலோர் வாழ்நிலைகளை விட எளிய மக்களின் வாழ்க்கையிலிருந்து நிறையச் செய்திகளை எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் ஆய்வாளர்களுக்கு இன்றளவுமான பேச்சுத் தமிழ் மொழியினைப் புரிந்து கொள்ள அவை தவிர உதவி செய்யக்கூடிய இலக்கியக் கருவிகள் வேறு எவையுமில்லை. இந்நிகண்டு நூல்கள் சமய எல்லைகளைத் தாண்டியனவாகவும் அமைகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு தொகுதிகளிலிருந்தும் சில எடுத்துக்காட்டுகளைக் காணலாம். நிகண்டுகளைப் பற்றிய புரிதலுக்கு இவை உதவும் இந்த எடுத்துக்காட்டுகள் திவாகரத்திலிருந்து மட்டும் இங்கே காட்டப்படுகின்றன.

தெய்வப் பெயர்களில் சிவன், திருமாலாகிய கடவுள்களோடு, சமண சமயம் சார்ந்து அருகனுக்கு நாற்பத்து மூன்று பெயர்களையும், அடித்தள மக்களின் வழிபடு தெய்வமான காடுகளுக்கு ஏழு பெயர்களையும், காளிக்குப் பதினான்கு பெயர்களையும், பகவதிக்கு இருபத்திரண்டு பெயர்களையும், திவாகரத்தில் காணலாம். நெருப்புக்கு 21 பெயர்கள்; இரண்டாவதான மக்கட்பெயர்த் தொகுதியில் துறவிகள், அறிஞர்கள், அரசர்கள், பரிவாரங்கள் ஆகிய பெயர்களோடு மருத்துவர், குயவர், உப்பு, விற்போர், சித்திரக்காரர் ஆகியோர் தம் பெயர்களையும் ஊன் விளைஞர், தோல் வினைஞர், கள் வினைஞர், பாணர், கழைத்கூத்தர், தமிழ்க்கூத்தர், வெறியாடுவோன், தேவராளன், கூத்தர் ஆகியோரின் பெயர்களையும் திவாகரம் பட்டியலிடுகின்றது. இதனால் நமது எழுத்திலக்கியங்களில் பெருமளவு விலக்கப்பட்டோர் நிகண்டு நூல்களால் முன்னிலைப் பெயர்களாகின்றன. இவற்றோடு உடலுறுப்புகளின் பெயர்களும் பேசப்படுகின்றன. விலங்கினப் பெயர்த்தொகுதியில் விலங்குகளின் வகைகளுள் அவற்றின் இளமைப் பெயர் களம் தரப்படுகின்றன. ஆட்டின் பொதும் பெயர்களையும் கூறிவிட்டு துருவாடு, வெள்ளாடு, வரையாடு, என வகைமைப் பெயர்களையும் அடுக்கிக் சொல்லும் நிகண்டு நூல்களில் அடுத்ததாக குட்டி வகைப் பெயர்களையும் காணுகின்றோம். பறவைகளின் வகைகளைப் பேசிய பிறகு மயிலின் பெயரோடு மயில் பீலியன் பெயர், மயில் இறகு முடியின் பெயர், மயில் சிகைகளின் பெயர்களைக் கூறி மிக நுணுக்கமாக, நத்தை, நண்டு, கரையான், புழு ஆகிய பெயர்களும் பட்டியலிடப்படுகின்றன. நாலாவது மரப்பெயர்த்தொகுதியில் 79 மரங்களில் பெயர்கள் பேசப்படுகின்றன. பூமாலையின் வகைகளாக மட்டும் 27 குறிக்கப்படுகின்றன. ஐந்தாவதான இடப்பெயர்த்தொகுதியில் ஊரைக் குறிக்க 27 பெயர்கள். அவற்றில் ஒரு நூற்பா, ''கல்வியூரி, கலிலூரியாகும், என்கிறது. ஆறாவதான பல்பொருள் பெயர்த்தொகுதியில் உலாகங்கள். மணிகள், அலங்காரப் பொருட்கள் பட்டியலிடப்படுகின்றன. சோறு என்பதை உணர்ந்த 24 சொற்களும், கள்ளுக்கு 48 சொற்களும் காட்டப்பட்டுள்ளன. தமிழர்கள் மதுவை ஒழுக்கப் கோட்பாடு சார்த்திக் காணவில்லை என்பதற்கு இது சான்றாகும்.. தமிழில் ''சிற்றுண்டி'' என்ற சொல் முதன்முதலாக இத்தொகுதியில்தான் காணப்படுகின்றது. பீரிகம் (பூரி) தோசை ஆகியவை அப்ப வகை உணவுகளாகும் எனத் திவாகரம் கூறுவதும் சமகால இலக்கியங்களில் இச்சொற்கள் காணப்படவில்லை என்பதும் சிந்திக்க தகுந்ததாகும்.

ஏழாவதான செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி ஆயுதங்களின் வடிவப்பெயர்களை முதலில் பேசுகின்றது. கழுமரத்தின் பெயரைக் ''கழுமுள்'' என்று சொல்வதிலிருந்து இப்பொழுது வழிபடு பொருள்களாகத் தமிழ்நாட்டில் காணப்படும் கழுமரங்களின் வடிவத்தினை அறிய முடிகிறது. பின்னர் பெண்களின் அணிகலன்கைளப் பேசி விட்டு இசைக் கருவிகளின் உறுப்புகளின் பெயர்களையும் நுட்பமாக அறியத் தருகின்றது. வீட்டில் பயன்படுத்தப் பெறும் பொருட்களான பாய், விளக்கு, நாழி, குடை, உரல் என்பவற்றோடு விளக்குமாறு, தலைச்சும்மாடு ஆகிய பெயர்களையும் இப்பகுதி பட்டியலிடுகின்றது. பண்பு பற்றிய பெயர்த்தொகுதி எட்டாவதாக கணிதவியல் அறிஞர்களும் அழகியல் குறித்துப்பேசுவோருக்கும் ஒரு அரிய கருவூலமாகும். ஐம்பொறிகளின் நுகர்வு பற்றிய கலைச்சொற்கள் இப்பகுதிகளில் நிறையவே இடம் பெற்றிருக்கின்றன. ஒன்பதாவதான செயல் பற்றிய பெயர்த்தொகுதி மனிதவுடலின் எல்லா அசைவுகளுக்குமான சொற்களைப் பட்டியலிடுகின்றனது.

பத்தாவது அமைவது ஒலி பற்றிய பெயர்த் தொகுதி. இதில் இசைத் துறைச் சார்ந்த கலைச் சொற்கள் நூற்றுக்கணக்கில் இடம் பெற்றுள்ளன. இத்தொகுதி எழுத்தில்லாத ஓசைப் பெயர்களையும் பட்டியலிட்டுக் காட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஒரு சொல் பல்பொருள் பெயர்த்தொகுதி என்பது பதினொன்றவாவது. இது தமிழ் மரபுக் கவிதையினைப் புரிந்து கொள்வதற்குத் துணை செய்வதாகும்.

இவ்வகையில் திவாகர நிகண்டு 9500 சொற்களைப் பதிவு செய்து வைத்துள்ளது. பிங்கல நிகண்டு 14700 சொற்களையும் சூடாமணி நிகண்டு 11,000 சொற்களையும் பதிவு செய்து வைத்துள்ளது. நிகண்டுகளின் பெருமையெல்லாம் அவை பெரும்பாலான தமிழ் எழுத்திலக்கியங்கள் போல மேலோர் மரபு மட்டும் சார்ந்தவையல்ல என்பதே, அவைதீக மரவுகளைத் தேடத் தொடங்கிய அயோத்திதாசர் பண்டிருக்கு நிகண்டு நூல்களின் அருமை புரிந்தது, அதனால் தான் அவர் தம் ஆய்வுநூல்களில் அடிக்கடி நிகண்டு நூல்களை மேற்கோள் காட்டுகிறார்.

நமது இலக்கிய மரபு

நமது இலக்கிய மரபு - பரிபாடலில் திருமால் - வளவதுரையன்

பரிபாடலின் இரண்டாம் பாடலைப் பாடியவர் கீரந்தையார் எனும் புலவர் . உலகத்தின்தோற்றமுறைகளையும்வராக அவதாரத்தையும் சிறப்பித்துக்கூறி கொடுமையான எண்ணங்கள்இல்லாத நல்லறிவை அருளவேண்டுமெனத் திருமாலிடம் இப்பாடலில் அவர் வேண்டுகிறார்.
பரம்பொருளாகிய இறைவனிடத்திலிருந்து வானமும் அதிலிருந்து படிப்படியாக காற்றுதீநீர்நிலம்முதலியவை தோன்றியதாக வேதங்கள் கூறுகின்றனமேலும் பல்வேறு ஊழிக்காலங்கள்கடந்தபின்னர் தான் நிலஊழி தோன்றுகிறது.


நிலஊழி தோன்றுவதற்கு முன் நீர் ஊழிக்காலத்தில் எங்கணும் பெருவெள்ளம் பெருக்கெடுத்துக்கிடந்ததுஅவ்வெள்ளத்தினுள்ளே நில ஊழி மறைந்துகிடந்ததுஅந்த நில ஊழி வெளியே வந்துஅதில் உயிாினங்கள் தோன்றத் திருமாலே காரணமாக விளங்குவதைப் பரிபாடலின்
'கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவனை '
எனும் அடிகள் காட்டுகின்றன.

திருமாலேஉயிர்கள் உண்டாதற் பொருட்டு நீ வராக அவதாரம் எடுத்து வெள்ளத்தடியிலே கிடந்தஇந்த நிலத்தினை எடுத்தாய்அச்செயலால் இது வராக கற்பமென்னும் பெயர் பெற்றதுஇவற்றைஅழித்தும் மீளத்தோற்றுவித்தும் வருகின்ற திருவிளையாட்டினை நீ தொடர்ந்து செய்து வருகிறாய்என்று பரிபாடல் கூறுகிறது.

இதையே கம்பர் 'அலகிலா விளையாட்டு ' என்பார்இந்த விளையாட்டை ஆடிக்கொண்டிருப்பதோடுதிருமாலே சித்துஅசித்து ஆகிய இரண்டாகவும் இவ்வுலகில் திகழ்கிறார் என்றுதிருமங்கையாழ்வார் கூறுகிறார்.

'திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
செழுநிலத்து உயிர்களும் மற்றும்
படர்பொருள் களுமாய் நின்றவன்... '
என்பன அவர் அருளிச் செய்த பாசுர அடிகளாகும்.

திருமாலே ஐம்பூதங்களாக விளங்குவதை நம்மாழ்வார்
'நீராய் நிலனாய் தீயாய்
காலாய் நெடுவானாய் ' என்று பாடுகிறார்.

நில ஊழியை வெளிக்கொணர்ந்த ஊழிமுதல்வனின் பெருமையை மேலும் பரிபாடல் பேசுகிறது.

யார் யார் இறைவனை எப்படி எல்லாம் மனத்தில் எண்ணுகிறார்களோ அவர்கள் கருத்திற்கேற்பஎம்பெருமான் காட்சியளிப்பார்.எல்லாவற்றையும் கடந்த பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட உருஎன்பது மாயத்தோற்றமே.
எனவேதான்

'வளையோடு புரையும் வாலியோற்கவன்
இளையன் என்போர்க்கு இளைய யாதலும் '
என்று பரிபாடல் கூறுகிறது.

மேலும்

'புதையருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியேற்கு
முதியை என் போர்க்கு முதுமை தோன்றலும் '
எனும் அடிகளிலிருந்து எம்பெருமான் பலராமன் என எண்ணுவார்க்குப் பலராமனாகவும் கண்ணன்என்பார்க்குக் கண்ணனாகவும் அவரவர் நினைப்பிற்கேற்ப அருள்செய்வார் என்பது விளங்குகிறது.
சங்கினோடு ஒப்பான வெண்மையான நிறத்தைக் கொண்ட பலராமன் என்பதை 'வளையோடுபுரையும் வாலியோன் ' எனும் அடிகாட்டும் போது பொியாழ்வாாின் பாசுரம் நினைவிற்குவருகிறதுதளர் நடைப்பருவத்தில் வெள்ளிப்பெருமலைக்குட்டனான பலராமன் விரைந்தோடஅவன் பின்னால் தொடர்ந்து கருமலைக் குட்டன் அடிவைத்துச் செல்வது போல் கண்ணன்வருவானோ என அவர் கேட்கிறார்.

'பலதோன் என்னும்
தன்நம்பி யோடப் பின்கூடச் செல்வான்
தளர்நடை நடவானோ ? '
என்றும் அவர் அருளிச் செய்கிறார்.

வராக அவதாரத்தைச் சிறப்பிப்பது இப்பாடலுக்குள்ள தனிச்சிறப்பாகும்வானளவு ஓங்கி நின்றவராகத்தின் கூர்மையான வெள்ளிய கொம்புகளுக்கிடையே நிலமகள் ஒரு புள்ளி போலவிளங்குகிறான்வராகக்களிறாகிய திருமால் அக்காலத்தே அவளை மணந்து கொண்டார் என்றும்இப்பாடல் காட்டுகிறது.

'பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப்
படைத்துக் காத் துண்டுமிழ்ந்த பரமன் '
என்று பெரி திரு மொழி காட்டுவதையும், பெரியாழ்வார்
'பன்றியும் மையும் மீனமுமாகிய
பாற்கடல் வண்ணா '
என்று அருளுவதையும் நினைக்கத் தோன்றுகிறது.

அடுத்து எதிர்த்து வரும் அவுணர்களை எம்பெருமான் வெற்றி கொண்ட விதம் கூறப்படுகிறது.பகைவரின் கொடிகள் அறுந்து விழும்படியாகவும்அவர்களின் செவிகள் செவிடாகும்படியாகவும்,அவர்தம் மணிமுடிகள் வீழும்படியாகவும் திருமாலின் சங்கு முழங்கிற்று.

'.... தீய அசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே '
என்று நாச்சியார் திருமொழியில் காண்கிறோம் .த்ிருமாலின் சக்கரப்படையானது பகைவரின்உடலிலிருந்து தலைகளை அறுத்துத் தள்ள அத்தலைகள் சிதறி விழுந்தன.பனைமரங்களின்மேலுள்ள பல பதினாயிரம் குலைகள் வீழ்வது போல் அவை வீழ்ந்ததாகப் பரிபாடல்

'பனைமிசைப் பலபதினாயிரம் குலைதரை உதிர்வ போல் '

என்று உவமை கூறுகிறதுதிருமங்கையாழ்வார் திருக்கண்ணங்குடியில் எழுந்தருளியுள்ளதிருமாலைப்பாடும்போது

'பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்
பருமுடி உதிரவில் வளைத்தோன் '
என்று அருளிச் செய்வது இங்கு நினைவு கூரத்தக்கது.

திருமாலின் ஒளி நீலமணியைப் போன்றதுஎம்பெருமான் கண்கள் தாமரை மலர்கள் போன்றன.அவர் வாய்மை தவறாமல் வரும் நாளைப் போன்றதுஅவர்தம் பொறுமை நிலத்தையும் எம்பிரான்அருள் மேகத்தையும் ஒத்தனஇவ்வாறு ஒட்டிமை பல கூறினாலும் 'எவ்வயிளோயும் நீயே ' என்றுகூறுவதால் அவர் அவற்றைக் கடந்து எல்லா இடங்களிலும் பரந்து விளங்குகிறார் என்று பரிபாடல்காட்டுகிறது.
மேலும் அந்தணர் முறையாகச் செய்கின்ற வேள்விச் சுடாில் நீ எழுந்தருளி அவர்களுக்குக் காட்சிதருகிறாய் என்று கூறப்படுவதால் சங்ககாலத்தில் வேள்விகள் நடைபெற்றதை அறிய முடிகிறது.

எம்பெருமான் சாதாரண மாந்தருக்குச் சிலைவடிவத்திலும் அந்தணருக்கு வேள்வித் தீயிலும்யோகியர்க்கு அவர் உள்ளத்திலும் சித்தர்களுக்கு எங்கும் எதனிடத்திலும் தோன்றுவான் என்றுகூறுவார்கள்.

'எம்பெருமானேதேவர்கட்கு சாவா மருந்தாகிய அமுதத்தைத் தந்தருள வேண்டுமென நீநினைத்தாய்உடனே அமுதம் அவர்களின் வாயினைச் சென்று அடைந்ததுஅவர்களும்முதுமையற்ற வாழ்வையும் தோற்காத தொள் வலியும் பெற்றனர்அமரர் பொருட்டாக அத்தகையநன்மை செய்து அருளிய பெரியோய் ! எமக்கும் அருள் புரிவீராக.

நாங்கள் நின் திருவடிகளில் எம் தலைகளை வைத்து வணங்கினோம்நின் புகழைச் சொல்லிநின்னைப் போற்றினோம்ஏன் தெரியுமா

'கொடும்பாடு அறியற்க எம் அறிவெனவே
என்று வேண்டுவதற்காகத்தான். '

என்று பரிபாடல் அடிகள் காட்டுகின்றன.

கொடும்பாடு என்பதற்கு மாறுபாடு என்று பொருள கொள்ளலாம்அறிவு என்பதே தெளிந்துஇருப்பதுதான்அதில் மயக்கமோமாறுபாடோ தோன்றக்கூடாதுஅறிவு தெளிவாக இருந்தால்தான்செய்யும் செயல் சிறந்து வாழ்வு மேம்பாடு அடையும்.எல்லாவற்றையும் அறிந்த பரம்பொருள் என்மனத்தை எக்காலத்தும் மாறுபாடு தோன்றாமல் இருக்க அருள் செய்ய வேண்டும்அதற்காகஇறைவனை நம் உள்ளில் இருப்பவனாக உணர்ந்து அவன் கடரடியைத் தொடவேண்டும் என்பதேஇப்பாடலின் கருத்தாகும்.

==

மருதம் இதழில் வெளியானது

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள்

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 4 - ப.முருகன் 

பள்ளு

திருவிழாக்காலங்களில் கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் நாடகங்கள் நடத்தப்படுவது உண்டு. கட்டபொம்மன் நாடகத்தில் ‘சக்களத்திச் சண்டை’ எனும்காட்சிகள் சுவாரஸ்யத்துக்காக சேர்க்கப்பட்டிருக்கும். அந்த சக்களத்திச் சண்டை எதனுடைய பிரதிபலிப்பு - தாக்கம் என்றால் முக்கூடற்பள்ளு எனும் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் சக்களத்திகளின் சண்டை தான்.

முக்கூடற்பள்ளு புகழ்பெற்ற பள்ளு இலக்கியமாகும். இது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஐவகை நிலங்களில் ஒன்று மருதநிலம். வயலும் வயல் சார்ந்த இடமும் கொண்ட இந்த நிலப் பகுதியில் செழித்து நடைபெறும் தொழில் உழவுத் தொழில். இந்தத் தொழிலில் ஈடுபடும் பள்ளர் இன மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு கூத்து வடிவில் பாடப்படுவது பள்ளு இலக்கியம். இதை உழத்திப் பாட்டு என்றும் அழைப்பார்கள். தமிழின் முதல் தலித் இலக்கியம் எனவும் கொள்ளலாம் என்கிறார் ஆய்வாளர் அருணன்.

உழவர்களின் தொழில் பள்ளத்தில் அதாவது பள்ளமான நீர் வயலில் நடைபெறுகிறது. அதனால் அவர்கள் பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்று கூறுவர். உழவுத் தொழிலும் பள்ளத்தில் நடக்கிறது. உழவர்களின் வாழ்க்கையும் பள்ளத்தில் கிடக்கிறது. அதனால்தான் உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது போன்ற பழமொழிகள் தோன்றின. அந்த அனுபவ மொழிகள் இன்றும் மாறாமல்தான் இருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் தற்போதைய விவசாயிகளின் தற்கொலைச்சாவுகள்.

பள்ளு நூல்களின் மூலம் பள்ளரின் பெருமை, மழைக்குறி, பள்ளர் பள்ளியர் பேச்சு, நெல்வகை, மாட்டுவகை, பயிர்த்தொழில் நுட்பங்கள், உழவு, நடவு, அறுவடை முதலியவை பற்றி அறிந்து கொள்ளலாம் என்று முனைவர் சா.சவரிமுத்து குறிப்பிடுகிறார்.

நெல்லு வகையை எண்ணினாலும் எண்ணலாம் பள்ளு வகையை எண்ண முடியாது என்னும் பழமொழியால் பள்ளு நூல்கள் மிகுதியாக இருந்திருக்கின்றன என்பதை அறியலாம் என்றும் அவர் கூறுகிறார்.

பள்ளு இலக்கியங்களுள் அருணாசலக் கவிராயர் எழுதிய சீர்காழிப் பள்ளும், பெரியவன் கவிராயர் எழுதிய முருகன் பள்ளும் குறிப்பிடத்தக்கவை. திருவாரூர் பள்ளு, வாரானைப் பள்ளு, ஞானப்பள்ளு, வைசியப் பள்ளு, திருநீலகண்டன் பள்ளு, கதிரமலைப்பள்ளு, குருகூர்ப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு போன்ற நூல்கள் சிறப்பானவை. எல்லாவற்றையும் விட சிறப்புடையதும் புகழ் பெற்றதும் முக்கூடற்பள்ளு ஆகும். இதுதான் பள்ளு நூல்களுள் பழமையானது.

இந்நூலை எழுதியவர் என்னயினாப் புலவர் என்று கூறப்படுகிறது. என்றாலும் நூலை எழுதியவர் பெயரை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இந்த நூல் தோன்றிய காலம் கி.பி. 18ம்நூற்றாண்டு எனத் தெரிகிறது. அந்தக் காலத்தில் சைவ, வைணவ சமயப் பிரிவினரிடையே மோதல்கள் நிகழ்ந்தன. அதனால் அக்காலத்து நூல்களில் இத்தகைய சமயப்பூசல்கள் வெளிப்படுகின்றன. நூலாசிரியர்கள் அவரவர் சமயத்துக் கருத்துக்களை தத்தம் நூல்களில் புகுத்தியுள்ளனர்.

இதர சிற்றிலக்கியங்களில் அரசன், இறைவன் போன்றவர்கள் தலைவர்களாக இருப்பார்கள். இதில் மட்டும்தான் உழைப்பாளி அதாவது விவசாயி, அவன் மனைவியர், அவனது ஆண்டை பாடப்படுகின்றனர். அவர்கள் தெய்வத்தைப் பற்றிப் பேசுவார்கள்.

முக்கூடற்பள்ளு நூலிலே காப்புச் செய்யுள்கள், குடிமை பெருமை, வளமை, செழுமை, குமுறல் கொடுமை, விடுதலை விளக்கம், விளைவு மகிழ்வு, கலங்கல் தெளிவு என ஏழு பகுதிகள் உள்ளன. இவற்றில் கொச்சகக்கலிப்பாவும் சிந்துவும் பாவகைகளாக இடம்பெறுகின்றன. பெரும்பாலான சிந்து பாடல்கள் பல்வேறு இராகம், தாளத்துடன் உள்ளன.

காப்புச் செய்யுள் பகுதி முடிந்ததும் பள்ளியரின் வரவு, முக்கூடற்பள்ளி, மருதூர்ப்பள்ளி என அறிமுகம் களை கட்டுவதே நாடகப்பாங்கிலானது. நிறைவுப் பகுதி பள்ளியரின் சமாதானம். கூடிப்பாடுதலுடன் அமைகிறது. பிறந்த ஊர்ப் பெருமையும் வணங்கும் கடவுள் நிறைவையும் சொல்லி ஏசலும் பூசலும் ஏராளமாய் நடக்கிறது. பள்ளனின் வரவும் பண்ணையாரின் உருட்டல் மிரட்டலும் தொடர்கிறது. இவற்றுக்கிடையில் அமைந்த கவிச்சுவையை நாம் பருகலாம்.

கடின உரையைக் கேட்டு வடிவழகக் குடும்பன்

குடிலிலிருந்தே அரை நொடியில் வந்தான்

பள்ளனைப் பண்ணைக்காரன்

கள்ளமாய்ப் பார்த்துப் பள்ளா

துள்ளாதே பண்ணைச் சேதி விள்ளடா என்றான்

என்ற பண்ணையாரின் கேள்விக்குப் பள்ளன் கூறிய பதில்,

பத்து உருவத்தழகர் பண்ணையான் கேட்டபடி

வித்துவகை மாட்டுவகை மேழி ஏர்க்கால் முதலாய்க்

கொத்துவகை அத்தனையும் கூட்டி வரத்துஞ் செலவும்

வைத்த இருப்புங்குடும்பன் மாறாமல் கூறினானே

இந்தப் பள்ளுக்குள் நுழைந்தால் இலக்கியச் சுவையை மட்டுமின்றி சமுதாய நிலையையும் தெளிவுறத் தெரி யலாம்.

நன்றி - தீக்கதிர் மற்றும் முருகன்

பரசுராமன் சூளுரையும் ஆதித்த கரிகாலன் கொலையும் – நடன.காசிநாதன்

பரசுராமன் சூளுரையும் ஆதித்த கரிகாலன் கொலையும் – நடன.காசிநாதன்

சோழப் பேரரசன் முதலாம் இராசராசன் கி.பி.985இல் முடிபுனைந்திருக்கிறான். முடி புனைந்து சில ஆண்டுகளுக்குள்ளாகவே சேர நாட்டிலிருந்த காந்தளூர்ச் சாலையைத் தாக்கி வெற்றி பெற்றிருக்கிறான் என்பது அவனது மெய்க்கீர்த்தியால் நமக்குத் தெரிய வருகிறது. அவன் அவ்வாறு விரைந்து காந்தளூர்ச் சாலையைத் தாக்குவதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆதித்த கரிகாலச் சோழன் கொலை
பொன் மாளிகைத் துஞ்சிய தேவரான சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன், அருண்மொழி என்று இரு மகன்களும் குந்தவை என்று ஒரு மகளும் இருந்திருக்கின்றனர். சுந்தர சோழன் இறப்புக்கு முன்பாகவே ஆதித்த கரிகாலன் சில சூழ்ச்சிக்காரர்களால் இரண்டகமாகச் சாகடிக்கப் பெற்றிருக்கிறான்
இத்துன்பச் செய்தி கடலூர் மாவட்டம், காட்டு மன்னார் கோயிலின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரன் கோயில் கல்வெட்டினால் தெரியவருகிறது. இவ்வூர், கல்வெட்டுகளில் “வீர நாராயணபுரச் சதுர்வேதிமங்கலம்” என்று குறிக்கப் பெறுகிறது. ஆதலால் இது முதலாம் பராந்தகச் சோழனால் ஏற்படுத்தப் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனருகில்தான் இப்பராந்தகச் சோழன் காலத்தில் அமைக்கப்பெற்ற வீரநாராயண ஏரியும் உள்ளது.
வீரநாராயணச் சதுர்வேதிமங்கலம்தான் வைணவ இலக்கியங்களில் பேசப்படும் வீரநாராயணபுரம் ஆகும். இவ்வீரநாரயணபுரத்தில்தான் வைணவப் பெரியார்கள் நாதமுனியும் அவரது திருப்பெயரர் யமுனாசார்யா என்று வழங்கப்பெற்ற ஆளவந்தாரும் தோன்றினர். ஆதலால் நான்கு வேதங்களும் கற்ற பார்ப்பன‌ர்கள் இவ்வூரில் முதலாம் பராந்தகன் காலம் முதலே வைணவ ஆசாரியர்கள் காலம் முடிய வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது. இங்குப் பெரும்பாலும் பார்ப்பன‌ர்கள்தான் நில உடைமையாளர்களாக விளங்கியிருக்கின்றனர் என்பதையும் கல்வெட்டுகள் காட்டுகின்றன.
உடையார்குடிக் கல்வெட்டு
இவ்வூர் அனந்தீசுவரன் கோயில் உண்ணாழியின் மேற்குச் சுவரில் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டுப் பகுதியைக் கீழே காண்போம்.
  1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம் “பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)…(இவன்) றம்பி
  2. ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
  3. பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
  4. கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர…
மேலே காணப்பெற்ற கல்வெட்டில் “பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனைக்” கொன்று “த்ரோஹிகளானவர்கள்” என்று தெளிவாகக் கூறப்பெற்றிருக்கிறது. அக்கொடும் பாதகச் செயலைச் செய்த துரோகிகள் யாவர் என்று அக்கொலையாளியின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறது. கொலையாளியின் பெயர்கள் அவர்கள் பார்ப்பன‌ர்கள் என்பதைக் காட்டுகின்றன. அப்பார்ப்பன‌ர்கள் ஏன் இந்த அழிவுச் செயலைச் செய்தார்கள் என்பது வரலாற்றாசிரியர்களுக்குப் புரியாத புதிராக இருந்து வருகிறது.
கொலைக்கான காரணம்
ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் சில ஊகங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாகச் சோழர் வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ.நீலகண்ட சாத்திரியார், கண்டராதித்த சோழரின் மகனும், சுந்தரசோழனின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பான உத்தம சோழன்தான் இவ்வந்தணர்களை ஏவி ஆதித்த கரிகாலனைக் கொன்றிருப்பான் என்று கருதியுள்ளார். இக்கருத்து முற்றிலும் தவறு என்று வரலாற்றிலும் தமிழிலக்கியத்திலும் சிறந்த அறிஞரான தி.வை.சதாசிவ பண்டாரத்தார் தக்க சான்றுகளுடன் மறுத்திருக்கிறார். இருப்பினும் அவர் மறுப்பை ஏற்றுக்கொள்ளாத சென்னை விவேகாநந்தர் கல்லூரிப் பேராசிரியர், கே.ஏ.நீலகண்ட சாத்திரியார் கருத்தே மேலோங்கி நிற்கிறது என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.
“இக்கட்டுரை உள்நோக்கம் கொண்ட கட்டுரை என்றும் தம் மரபினரைப் பாதுகாக்க எடுத்துக்கொண்ட முயற்சி” என்றும் தெரிவித்து வரலாற்று அறிஞர் க.த. திருநாவுக்கரசு தம் கட்டுரையொன்றில் சாடியிருக்கிறார். இவர், ஆதித்த கரிகாலன் பாண்டியனை வென்று அவனது தலையைக் கொண்டதால், பாண்டியனின் மரபினர் இவ்வந்தணர்களில் ஒருவனான “பஞ்சவன் பிரமாதிராசன்” மூலம் ஆதித்த கரிகாலச் சோழனைத் தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள் என்று புது விளக்கம் தந்துள்ளார். இவர், “பஞ்சவன் பிரமாதிராசன்” பாண்டியர்களின் அரசு அலுவலர் என்று கருதியிருக்கிறார். இவர் குறிப்பிட்டுள்ள “பஞ்சவன் பிரமாதிராசன்”, “ரவிதாசன்” என்பது ரவி குலத்தவனின் (சூரிய குலத்தினனின்) அடியான் என்று பொருள். எனவே, சூரியகுல அடியானாகிய பஞ்சவன் பிரமாதிராசன் சோழர், பாண்டியர்களை வென்றபொழுது, “பஞ்சவன் பிரமாதிராசன்” என்ற விருதுப் பெயரைச் சோழ வேந்தனால் சூட்டப்பட்டவனாகலாம். ஆதலால் அவன் சோழ அதிகாரியே தவிர பாண்டியனின் அரசதிகாரியில்லை.
கொலைக் கரணியம் யாது?
இந்தச் சூழ்நிலையில், ஆதித்த கரிகாலனைக் கொன்ற தீயவர் யாவர்? அவனைக் கொன்றதற்கான கரணியம் யாது? என்பது நம்முன் நிற்கும் வினாக்களாகும். இதற்கு விடை காண வேண்டுமென்றால் தொன்மத்தையும், இலக்கியத்தையும், கல்வெட்டு, செப்பேட்டு வரிகளையும் நாம் ஆராய வேண்டுவது தேவையாகிறது.
தொன்மம் கூறுவது என்ன?
சூரிய குலத்தில், கேகயநாட்டுக் கிருதவீரியனுக்கும் சுகந்தைக்கும் பிறந்தவன் கார்த்த வீரியன். இவன் ஒரு சத்திரியன். இவன் சமதக்கனி முனிவரிடமிருந்து “ஓமதேனு” எனும் பசுவைக் கவர்ந்ததனால் பரசுராமர் இவனைக் கொன்றார். இதைக் கேள்வியுற்ற கார்த்த வீரியர் மைந்தர், பரசுராமர் இல்லாத நேரத்தில் சமதக்கினி முனிவரைக் கொலை புரிந்தனர். பரசுராமர் அங்கு வந்தவுடன், சமதக்கினி முனிவர் தேவியார் இருபத்தோரு முறை தம் மார்பிலடித்துக்கொண்டு அவன் தந்தை இறந்த செய்தியைத் தெரிவித்தாள். கோபமுற்ற பரசுராமர் கார்த்தவீரியன் குலமாகிய சூரியகுல மரபினர்களை அழிப்பதாக உறுதிகூறி இருபத்தொரு தலைமுறை கருவறுத்தனன். அப்போது தப்பியவர்கள் கார்த்தவீரியன் புதல்வர்களாகிய சய்த்துவசன், வீரசேனன்,விருடணன்,மதுசூரன் அல்லது ஊர்ச்சிதன் ஆகியோராவர் என்று மச்சிய புராணம் கூறுகிறது.
இத்தொன்மத்தில் சூரிய குலத்தின் 21 தலைமுறைச் சத்திரியர்களைப் பரசுராமர் பூண்டோடு அழித்தார் என்பது மையக்கருத்தாகும். ஆனாலும் அவரிடமிருந்து தப்பியவர்களும் சிலர் இருந்தனர் என்பதுமாகும்.
இலக்கியக் கூற்று
இத்தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் ஒரு செய்தியை மணிமேகலையில் தெரிவித்திருக்கிறார்.
“மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாதொளி நீயெனக்
கன்னி யேவலின் காந்த மன்னவன்
இந்நகர் காப்போன் யாரென நினைஇ
…………….
காவற் கணிகை தனக்காங் காதலன்
இகழ்ந்தோர்க் காயினும் என்சுத லில்லான்
ககந்தனா மெனக் காதலிற் கூஉய்
அரசா ளுரிமை நின்பால் இன்மையின்
பரசுராம னின்பால் வந்தணுகான்”
அதாவது, பரசுராமன்(மழுவாள் நெடியோன்) அரச குலத்தை(சத்திரிய குலத்தை) அழிப்பதற்காக உறுதியேற்றுக் கொண்டு புகார் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். நீ அவன் கண்ணில்படுவது தகாது, ஆதலால் நீ உன் கணிகை மகனான சுகந்தனிடம் ஆட்சியை ஒப்ப்டைத்துவிட்டு ஓடி ஒளிந்துகொள் என்று புகாரின் கன்னித்தெய்வம் “காந்தமன்” என்ற சோழ அரசினிடம் கூறியதுதான் அச்செய்தி. சோழர் சூரிய குலத்த்தைச் சார்ந்த சத்திரியர்கள் என்பதால்தான் பரசுராமன் சோழ வேந்தன் காந்த்மனைத் தாக்க வந்திருக்கிறான்.
மேலே குறிக்கப்பெற்ற இரு செய்திகளையும் அடிபடையாகக் கொண்டு ஆய்ந்து பார்ப்போமானால், சூரிய குலத்தில் தோன்றிய சோழ சத்திரிய அரசர்கள் மீது பரசுராமனுக்கும் அவரது மரபினர்க்கும் சினமும் எரிச்சலும் இருந்திருக்கிறது என்பது தெரியவரும்.
கல்வெட்டு, செப்புப் பட்டயச் சான்று
இயல்பாகவே கற்றறிந்த அந்தணர்கள் சத்திரியர் மீது மனக்கசப்பு கொண்டிருந்திருக்கின்றனர் என்பது பல்லவர் காலத்தில் கதம்ப பார்ப்பன‌ அரசன் “மயூரசர்மன்”, காஞ்சிபுரம் கடிகைக்கு உயர் கல்வி கற்க வந்தபோது, பல்லவர் குதிரை வீரன் ஒருவனால் கடிகைக்குள் நுழையவிடாது தடுத்துவிட்டபொழுது, அப்பார்ப்பன‌ மன்னன், “கடவுளே இந்தக் கலியுகத்தில் பார்ப்பன‌ர் சத்திரியர்களுக்கு அடங்கிய நிலையில் இருக்க வேண்டியுள்ளதே! பார்ப்பன‌ர் தன் குருவின் குடும்பத்துகு உரிய பணிவிடை செய்திருந்தாலும், வேதங்களின் உறுப்புகளை முறையாகப் படித்திருந்தாலும், அவன் சமயத்தில் முழுத்துவம் அடைவதற்கு (பல்லவ) அரசனைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. மனவலியை ஏற்படுத்த இதைவிட வேறு என்ன வேண்டியிருக்கிறது?” என்று தமக்குத் தாமே புலம்பியிருக்கிறான். இச்செய்தி தாலகுண்டாக் கல்வெட்டினால் புலப்படுகிறது. பல்லவர் சத்திரியர் என்பது காசாக்குடிச் செப்பேடு நரசிம்மவர்மனை “சத்திரிய சூளாமணி” என்பதாலும், திருவெள்ளறை மூன்றாம் நரசிம்மப் பல்லவன் தம்மை “சத்திரிய சிம்மன்” என்று அழைத்துக் கொண்டதாலும் உணரலாம்.
தாலகுண்டா கல்வெட்டு தெரிவிக்கும் முதன்மைச் செய்தி யாதெனில் பார்ப்பன‌ மன்னர்களும் பார்ப்பனர்களும் சத்திரிய மன்னர்கள் மீது வெளியில் காட்டிக் கொள்ளாத பகைமை உணர்வைக் கொண்டிருந்தார்கள் என்பதேயாகும். இதுவும் அந்தப் பரசுராமனின் சத்திரிய மன்னர்களின் அழிப்பின் ஒரு கூறே என்று கருதலாம்.
பரசுராமன் கதை மேற்போக்காகப் பார்க்கையில் ஒரு தொன்மம் போன்று தோன்றினாலும், பார்ப்பன‌ – சத்திரிய அரசர்களின் பகைமையை எதிரொலிப்பதாகவே அதைக் கொள்ளல் வேண்டும்.
கண்டராதித்தன் மேற்கெழுந்தருளியது எதற்காக?
பிறகாலச் சோழ மன்னர்களில் முதற்பராந்தகனின் மகன் கண்டராதித்தனை “மேற்கெழுந்தருளிய தேவர்” என்று உடையார்குடிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவர் சோழ நாட்டின், மேற்குப் பகுதிக்கு எதற்காகச் சென்றார் என்பதில் வரலாற்றாசிரியர்கள் வேறுபட்ட கருத்தைக் கூறியுள்ளனர். இவன் மேற்றிசையில் இராட்டிரகூட மன்னரோடு பொருது அதில் இறந்திருக்கலாம் என்பது ஒரு கருத்து. இம்மன்னன் தல யாத்திரைக்குச் சென்று திரும்பாமை என்பது பிறிதொரு கருத்து.
இவர் காலத்தில் முதன் முதலாகக் “கண்டராதித்த பெரும் பள்ளி” என்ற புறச் சமயக் கோயில் ஏற்படுத்தப்பெற்றிருக்கிறது. கண்டராதித்த சோழனின் இப்புறச் சமயச் சார்பும், இவன் ஒரு சத்திரிய மன்னன் என்ற நிலையும், இவன், 9ஆம் திருமுறையில் சேர்க்கப் பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவன் என்பதும், காந்தளுர்ச் சாலையிலிருந்த பரசுராமன் வழிவந்தோரை இவன் மீது வெறுப்படையச் செய்திருக்கும். அவர்களை அமைதிப்படுத்த இம்மன்னன் சென்றிருக்கலாம். அப்போது மேற்குத் திசையில் (சேர நாட்டுக் காந்தளூர்ச் சாலையில்) இம்மன்னன் நயவஞ்சகமாக சாகடிக்கப்பட்டிருக்கலாம். ஆதலால் இவன் மீண்டும் சோழ நாட்டுக்குத் திரும்ப இயலாது போய்விட்டது. இதுதான் “மேற்கெழுந்தருளிய தேவர்” என்ற மரியாதைச் சொல்லுக்கு உரிய பொருளாக இருக்கும்.
இம்மன்னன் காந்தளூர்ச் சாலையில் கொல்லப்பெற்ற செய்தி, இவரது தம்பி மகனாகிய சுந்தரசோழன் ஆட்சியின் இறுதிக் காலத்தில்தான் தெரிய நேர்ந்திருக்கிறது. சுந்தர சோழனை அவன் காலத்தில் வெளியிடப் பெற்ற அன்பில் செப்பேடு “சத்திரியர்களில் முதன்மையானவன்” என்று புகழ்ந்துரைக்கிறது.
சத்திரியர்களின் எதிரியான பரசுராமனின் வழிவந்தோரால் தம் பெரிய தந்தை சாகடிக்கப்பட்டிருக்கிறான் என்று தெரிந்தவுடன் தம் மூத்த மகன் ஆதித்த கரிகாலனைக் காந்தளூர்ச்சாலைக்கு அனுப்பி அந்நயவஞ்சகர்களைத் தண்டிக்க தக்க நடவடிக்கையை மேற்கொண்டிருப்பான்.அத்திட்டம் தம் செவிகளுக்கு எட்டவே பரசுராமன் வழிவந்தோரில், உடையார்குடியில் வாழ்ந்து வந்த மேலே குறிப்பிட்ட நான்கு “துரோகிகளும்” ஆதித்த கரிகாலனைச் சூழ்ச்சி செய்து கொன்றுவிட்டனர்.
சுந்தர சோழனும் மிகுந்த தமிழ்ப்பற்றாளன் என்பதை “வீரசோழியம்” என்னும் தமிழ் இலக்கண நூல் உரை விரித்துரைத்துள்ளது. தாம் ஒரு சத்திரியன் என்பதும், தம் தமிழ்ப்பற்றும்தான் சுந்தர சோழனின் உடனடி நடவடிக்கைகுக் காரணமாகலாம்.
கொலையாளிகளைக் கண்டறிவதில் சுணக்கம்
ஆதித்த கரிகாலனைக் கொன்ற தீயவர்களைக் கண்டறிவதில் காலச் சுணக்கமாகியிருக்கும். ஆதலால் தான் உத்தம சோழன் ஆட்சிக் காலத்தில் அக்கயவர்களைத் தண்டிக்க இயலவில்லை. அவனுக்குப் பின்பு அரசாட்சி ஏற்ற முதலாம் இராசராசன் தம் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே “அத்துரோகிகள்” யார் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களது நிலம் மற்றும் அவர்களது உறவினர்களின் நிலங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விற்று, அரசுக்கருவூலத்தில் ஒப்படைக்கக் கட்டளையிட்டிருக்கிறான் இராசராசன் என்பதே சரியான கருத்தாக இருக்க முடியும்.
காந்தளூர்ச் சாலையை முதலில் தாக்கியதன் காரணம்
ஆதலால் தம் இரண்டாம் ஆட்சியாண்டில் அக்கயவர்களுக்குத் தண்டனை வழங்கிவிட்டு,தம் மூன்றாம் ஆட்சியாண்டிலேயே அக்கொலைக்கு மூலக்காரணியர்களான காந்தளூர்ச்சாலையிலிருந்த பரசுராமன் வழிவந்தோரை வாதத்தில் வென்று தாம் ஒரு “ராஜஸர்வஞ்ஞன்” என்பதைப் புலப்படுத்தியதோடு, அச்சாலையை நிலைகுலையச் செய்து, பின்பு தம் பெருந்தன்மையால் மீண்டும் அதைப் பழைய நிலையிலேயே இயங்கவும் செய்ததைத் தம் முதல் வெற்றியாகவும், மற்ற எல்லா வெற்றிகளிலும் முதன்மையானதாகவும் கருதியிருக்கிறான். எனவேதான் அவ்வெற்றியை தம் மெய்கீர்த்தியில் “காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி” என்று முதலாவதாகக் குறிப்பிட்டுக் கொண்டான்.
பரசுராமன் நாடு
திருவாலங்காட்டுச் செப்பேட்டில் முதலாம் இராசராசனுடைய இவ்வெற்றி “பரசுராமனது நாட்டை வென்றது” என்று குறிப்பிடப்படுகிறது. இதேபோன்று இப்பெருவேந்தனின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா மகன் முதலாம் இராசேந்திரனும் “சோழ நாட்டுக்கு மேற்கே அமைந்திருந்த சேரநாட்டையும் பல்பழந்தீவுகளையும் வெற்றி கொண்டதோடு, சேரரின் முடியையும், மாலையையும், பரசுராமரால் சாந்திமத்தீவில் வைக்கப்பெற்றிருந்த செம்பொன் முடியையும் தம் ஐந்தாம் ஆட்சியாண்டில் கவர்ந்து கொண்டான்” என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
திருமறை இருக்குமிடம் காட்ட மறுத்ததன் காரணம்
ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகளைத் தண்டித்ததற்கும் தில்லை நடராசர் கோயிலில் திருமறைகள் இருக்குமிடத்தைக் காட்ட மறுத்த தில்லை மூவாயிரவர் செயலுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். ஏனெனில் தில்லை மூவாயிரவரும் சேர நாட்டைச் சேர்ந்தவர்களேயாவர். அவர்களுக்கும் பரசுராமன் வழி வந்தோரான காந்தளூர்ச்சாலை அந்தணர்களுக்கும் உடையார்குடித் துரோகிகளுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். ஏனெனில் திருமறை ஓத முக்கிய இடம்.
ஆதித்த கரிகாலனைப் பார்ப்பன‌ர்கள் கொன்றதன் கரணியத்தாலோ என்னவோ இராசராசன் தம் நாட்டில் வேதங்கள் ஒலிப்பதற்குப் பகரமாகத் திருமறை ஓதுவதற்கு மிகுந்த முதன்மை தந்திருக்கிறான். இங்கு மற்றொன்றையும் கருதிப் பார்க்க வேண்டியுள்ளது.
ஒரேயொரு செப்புப் பட்டயம்
பிற்காலச் சோழர்களில் பெரும் புகழ் படைத்த பேரரசாக விளங்கிய இராசராசன் வெளியிட்டதாக ஒரே ஒரு செப்புப் பட்டயம்தான் இதுவரை கிடைத்திருக்கிறது. அப்பட்டயமும் “க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டுப் பட்டணக் கூற்றத்து நாகப்பட்டிணத்தில் கடாரத்தரையன் சூளாமணி பன்மனால் அமைக்கப் பெற்ற புத்தப் பள்ளிக்கு” அளிக்கப் பெற்ற நிலக் கொடையைக் குறிப்பதாகத்தான் உள்ளது. பார்ப்பன‌ர்களுக்கு இவன் காலத்தில் நிலக்கொடை வழங்கி வெளியிட்ட செப்புப் பட்டயம் ஒன்றுகூட இதுவரை கிடைக்காமலிருப்பதும், இவன் பார்ப்பன‌ர்கள்மீது கொண்டிருந்த வெறுப்பை எதிரொலிப்பதாகவே தெரிகிறது.
இம்மன்னன் தாம் “சத்திரியர்களின் சிகாமணி” என்று பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிறான். மேலும் ஒரு வளநாட்டுக்குச் “சத்திரிய சிகாமணி வளநாடு” என்று பெயரிட்டிருக்கிறான். ஆதலால் தாம் ஒரு “சத்திரியன்” என்று கூறிப் பெருமைப்பட்டிருக்கிறான். இவையெல்லாம் முதலாம் இராசராசனின் பரசுராமர் வழிவந்தோர் எதிர்ப்பைப் புலப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
- தொல்லியலறிஞர் நடன. காசிநாதன்,
தமிழ்நாட்டரசுத் தொல்லியல் துறை மேனாள் இயக்குநர்
(கட்டுரை: “முதன்மொழி” சிற்றிதழின் அக்தோபர் – திசம்பர் 2010 வெளியீட்டில் வந்தது)